19 August, 2006

ஐ.நா. உப மனித ஆணைக்குழுவில் முல்லைப் படுகொலை.

ஐக்கிய நாடுகள் சபையின் உப மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் "சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற சுவிஸ் நாட்டை தளமாக கொணடு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிறிலங்கா அரசின் கடந்த கால படுகொலைகளை சமர்ப்பித்துள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.08.06) நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சார்பாக திருமதி டியெற்றி மக்கோணால் அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் தனதுரையில் கூறியதாவது: "இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசுகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அடக்குமுறை, இன வேறுபாடு காட்டும் சட்டங்களுடன் கூடிய காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கு, தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட 35 வருடகால சாத்வீகப் போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளாரின் அரச பயங்கரவாதத்தினால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தீவில் 1983 ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் உருவாகியது. "இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கான நிர்வாகம் அவர்களது தாயக பூமியின் 70 வீதமான பிரதேசத்தில் உருவாகியுள்ளது. "கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பல நாட்டின் முக்கிய புள்ளிகளும், இராஜதந்திரிகளும் தமிழர்களுக்கான நிர்வாகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். "இன்று சிறப்பாக கடந்த நவம்பர் மாதம் முதல் இலங்கைத்தீவில் நடப்பவை அதிர்ச்சிக்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் உரியவை. "கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறிலங்கா அரசு விமானத்தாக்குதலை ஆரம்பித்த காரணத்தினால், இடையிடையே சிறு, சிறு மீறல்களுடன் நடைமுறையிலிருந்து வந்த யுத்த நிறுத்த உடன்படிக்யை சிறிலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது. "கடந்த சில தினங்களாக சிறிலங்கா அரசினால் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ, விமானத் தாக்குதலினல் ஏறக்குறைய 60,000 தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தும், மனிதாபிமான வேலைகளில் ஈடுபடுவோர் 18 பேர் கொல்லப்பட்டும் 700-க்கும் மேற்பட்டொர் படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். கடந்த சில தினங்களாக உக்கிரமான யுத்தம் வடக்கு-கிழக்கில் நடைபெறுகின்றது. "கடந்த திங்கட்கிழமை (14.08.06) முல்லைத்தீவு என்னும் இடத்தில் நடைபெற்ற கொடூர சம்பவத்தை, இந்த உப மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு மிக அதிர்ச்சியுடனும் கவலையுடனும் கொண்டுவர விரும்புகிறேன். "முல்லைதீவு மாவட்டத்தில் முதலுதவி பயிற்சி வகுப்புக்களில் ஈடுபட்டிருந்த 15 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மணவிகள் சிறிலங்கா அரசின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் 61 மாணவிகள் பலியாகியும் 129 மாணவிகள் மிகவும் மோசமான படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை, சிறிலங்கா யுத்த நிறுத்த கண்கணிப்பு குழு, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான பிரிவுகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. "சிறுவர், சிறுமிகளை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்த உப மனித உரிமை ஆணைக்குழு போன்ற சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என இங்கு வேண்டிக்கொள்கிறேன்" என்றார் டியெற்றி மக்கோணால். நன்றி>புதினம்

0 comments: