31 August, 2006

சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி.

மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியிருப்பதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலே அப்பகுதியில் எவரையும் அனுமதிக்கவில்லை. மூதூர் படுகொலைக்கு இராணுவம்தான் பொறுப்பு என்று அவர் கூறவேண்டியதில்லை. அவருடன் இது தொடர்பில் உரையாட வேண்டியதுள்ளது என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தற்போது லண்டனில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச மங்கள சமரவீர, சிறிலங்கா காவல்துறையினரது விசாரணை, தடவியல் சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் இராணுவத்தினர் மீது கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. இதற்காக உல்ப் ஹென்றிக்சன் பொய்யர் என்று சொல்லமாட்டேன். அது பொறுப்பற்ற அறிக்கை. இசைக்கு அப்பால் ஒருவர் பாடுகிறார் என்பதற்காக பாடலை மோசம் என்று கூறமாட்டோம். அதுபோல்தான் கண்காணிப்புக் குழுவும். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். தற்போதைய நிலைமைகளில் கண்காணிப்புக் குழுவினரது பங்கு காத்திரமானது. இச்சூழ்நிலையில் கண்காணிப்புக் குழுவினர் பக்கச்சார்பற்று சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும் என்றார். நீதித்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது எமக்கு இடையூறு செய்துள்ளது. நீதித்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏன் அவசரமாக இந்த முடிவுக்கு கண்காணிப்புக் குழுவினர் வந்தனர் என்று சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார். அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், இத்தகைய முடிவுகளை வெளியிட கண்காணிப்புக் குழுத் தலைவர் தகுதியற்றவர். படுகொலைச் சம்பவம் நடந்த பிரதேசமானது ஓகஸ்ட் 2 முதல் 5 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. படுகொலையானது 3 ஆம் நாள் இரவு அல்லது 4 ஆம் நாள் காலை நடைபெற்றிருக்கக்கூடும் என்றார். கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையை நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்

இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை.

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்து நிவாரணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நேற்று புதன்கிழமை குற்றம்சாட்டியது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் கிளிண்டனின் செயலாளரும் ஆழிப்பேரலைக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியுமான எரிக் சுவர்ட்ஸ் கொழும்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று புதன்கிழமையன்று கூறியதாவது: ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளை மீறிய செயல் இது. இந்தப் படுகொலையை சகித்துக் கொள்ள முடியாது. தற்போது மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாரிய ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நிவாரணப் பணியாளர்கள் சுதந்திரமாக இயங்கவும் அதே நேரத்தில் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிவாரணப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நூறுமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர். ஐ.நா. அவசரகால நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேன் ஈகெலண்ட் கூறியதாவது: மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை அரசாங்கம் தண்டிக்காதவரை எமது பணிகளை இடை நிறுத்த நேரிடும். பாரிய மனித உரிமை மீறலான இச்சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது அச்சத்தை அதிகரித்துள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வோர் நிலை நிச்சயமற்றதாக உள்ளது என்றார். நன்றி>புதினம்.

30 August, 2006

தமிழ்நாடுமாநிலம் எமக்கு எதிராக உள்ளது-மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவதாக நோர்வே வானொலியான (என்.ஆர்.கே.பி1) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை மேற்கோள்காட்டி நோர்வே வானொலி இச்செய்தியைத் தெரிவித்துள்ளது. ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி ஒலிபரப்பிய செய்தி விவரம்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருந்திருந்தால் சிறிலங்கா ஊடகங்களை நாளாந்த அடிப்படையில் அணுகிக் கொண்டிருப்போம். ஆனால் நாங்கள் இருதரப்பினரையும் சமதரப்பாக பாவிக்கிறோம். இருதரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தரப்பினர். இருவரையும் சமதரப்பாகத்தான் எங்களால் பாவிக்க முடியும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச அளவில் தனிமைப்படுத்தக் கோரும் கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது எமது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது என்று ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. மேலும், தனது அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் எதிராக உள்ள நிலையில் இனப்பிரச்சனையில் தனது அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதற்காக இங்கிலாந்தின் உதவியை மகிந்த ராஜபக்ச கோரியதாகவும் நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைக்கு எதிராக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்றும் நோர்வே வானொலியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்:

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவை: இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "பால்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்றும் இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார். "மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை. வேறு சில காரணங்கள்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். நன்ரி>புதினம்.

இந்தியாவின் அழைப்பை நிராகரித்தது இலங்கை.

மோதலை நிறுத்தும்படி கோரும் இந்தியாவின் அழைப்பு நிராகரிப்பு? சம்பூரைக் கைப்பற்றிய பின்னரே அரசு ஓயுமாம் தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தும்படி இந்தியாவும் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் விடுத்த அழைப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது எனவும் திருகோணமலைத் துறைமுகத்தின் பாது காப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பூர்ப் பகுதியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்த பின்னரே ஓய்வது என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக் கிறது எனவும் புதுடில்லியில் வெளியான செய்திகள் தெரிவித்தன. இலங்கையில் தற்போதைய மோதல் களைத் தொடர்வதால் நீண்ட காலத்தில் ஏற் படக்கூடிய பின்னடைவுகள் தொடர்பாக இந்தி யாவும், அமெரிக்காவும் தத்தமது கவலையை நேரடியாகவும், வேறு வழிகளிலும் சம்பந் தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவித்துவிட் டன. இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அத்தகவல் தெரி விக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைகளைப் புறக் கணித்துவிட்டுத் திருகோணமலைக்கு அருகே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சம்பூர்ப் பிரதேசத்தைக் கைப்பற்றும் தாக்குதல் நட வடிக்கை ஒன்றைக் கடந்த திங்களன்று முனைப்புடன் ஆரம்பித்து விட்டது இலங்கை. புலிகள் சம்பூரில் நிலை கொண்டிருப்பது தமது திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஆபத்தானது என்றும் ஆகவே, அதைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் எடுக்கும் இராணுவ நடவடிக்கையை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று சர்வதேச சமூகம் கருதக் கூடாது என்றும் இலங்கை அரசுத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சாரப்பட புதுடில்லி செய்தி வட் டாரங்கள் நேற்றுத் தகவல்களை வெளியிட் டன. இணைப்பு : newstamilnet.com Wednesday, 30 Aug 2006 USA

மீண்டும் எம்ஜிஆர்சிலைக்கு தார்பூசி கை உடைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாசையூரில் சிறிலங்கா இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இருந்த எம்ஜிஆர் சிலை நேற்று தார்பூசி கை உடைக்கப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை, குருநகர் ஆகிய இடங்களைத் தொடர்ந்து பாசையூரிலும் இந்த காட்டுமிராண்டிச் செயலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைகள் சேதப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

29 August, 2006

ஜெயலலிதா கடும் சீற்றம்.

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற செயல். இதற்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்

பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைத் தொடக்கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் வைரமுத்து ஆற்றிய கண்டன உரை: ஈழத்தின் செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரத்தில் கண்ணீரஞ்சலி செலுத்துவதற்காகவும் சிங்கள வெறித்தனத்துக்கு நம்முடைய கண்டனத்தைத் தெரிவிக்கவும் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள பிஞ்சுக் கால்களைப் பார்த்தால்- இந்தப் படத்தில் சுரைக்காய்களைப் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுப் பிணங்களைப் பார்த்தால்- இவர்கள் போராளிகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிற பொய் உடைகிறது என்பது நாட்டுக்கு விளங்கும். நண்பர்களே! மூன்று வேண்டுகோளோடு இங்கு வந்திருக்கிறேன முதல் வேண்டுகோள்- தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு: கும்பகோணத்தில் நடந்தது தமிழ்நாடு சகித்துக் கொள்ள முடியாத துயரம்- பள்ளிப் பிள்ளைகளின் மரணம். அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் மரணத்துக்கு தமிழ்நாடே எழுந்து நின்று அழுதது. இந்த செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரம் அந்த அளவுக்கு வருத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். விபத்துக்கு அழக்கூடிய தமிழன்- ந கொலைக்கு அழமாட்டாயா? என்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி கேட்க வேண்டும். இந்த துயரத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும். கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் அங்கு அந்தப் போராட்டம் ஓயவேப் போவதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுகிறேன். சிங்கள இராணுவம் நேற்று ஒப்புக் கொண்டிருக்கிறது- போரால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது- போர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை- விடுதலைப் புலிகளை நாங்கள் வெல்ல முடியாது என்று ஒட்டுமொத்தமாக சிங்கள அரசு பதிவு செய்திருக்கிறது. பிரபாகரனின் நிழலைத் தொடக் கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்பதுதான் உண்மை. சிங்கள அரசுக்கு ஒரு வார்த்தை- யுத்தம் செய்கிறீர்களே- உங்கள் யுத்தத்தில் உணர்ச்சி இருக்கிறதா? தமிழன தன் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- தன் உரிமைகளைப் பேணிக் கொள்வதற்காக- தன் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக- உணர்ச்சியோடு போராடுகிறான். ஒரு முயலை ஒரு சிங்கம் துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது சிங்கத்தின் வேகம்தான் அதிகமாக இருக்கும் என்று தப்பான தகவல் தரப்பட்டது. சிங்கம் உணவுக்காக ஓடுகிறது. முயல் உயிரைக் காக்க ஓடுகிறது. முயலின் வேகம்தான் சிங்கத்தின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். அதுபோல்தான் சிங்களவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்கள்- நம் தமிழர்கள் இனமானம் காக்கப் போராடுகிறார்கள். இந்த உணர்ச்சிகள் இருக்கும் வரை அவர்களை வெல்லவே முடியாது. இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்- இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்திய இறையாண்மைக்கு நாங்கள் என்றும் பங்கம் விளைவிப்பவர்கள் அல்ல. சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் ஒன்றே போதும் அவரது நெஞ்சின் வலி என்ன என்று. அவரால் இந்திய இறையாண்மைக்குட்பட்டு என்ன வகையில் தன் வலியை- கருத்தை வெளிப்படுத்த முடியும்- ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதை அவர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசே! நீ சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கினால் அங்கு தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும். தமிழர்களுக்கு அதுவிரோதம். ஒருவேளை இந்திய அரசு ஆயுதம் வழங்காததால் பாகிஸ்தானிடம் சிங்கள அரசு ஆயுதம் வாங்கிக் கொண்டால் அது தமிழனுக்கு மட்டும் ஆபத்து அல்ல- இந்தியாவுக்கே அது ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது. சிங்களர்கள் சூழ்ச்சிக்காரர்கள். வங்காள விரிகுடாவில் ஒரு கையை நீட்டி இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். அரபிக் கடலில் ஒரு கையை நீட்டி பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறார்கள். இந்திய அரசே! தெளிவாக இரு! பாகிஸ்தான் ஆயுதம் உள்ளே போகாமல் தடுத்து விடு- தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆயுதம் வழங்கும் எண்ணத்தையே நிறுத்திவிடு. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரச்சனைகள் தீரும் என்று போலிக் கனவு காண நாம் தயாராக இல்லை. இது ஒரு அடையாளம். இலங்கைத் தமிழன் அங்கே பாதிக்கப்பட்டால் இங்கேயிருக்கிற தமிழன் சந்தோசத்துடன் விழித்திருக்கிற முடியாது. அவன் மகிழ்ச்சியோடு ஓய்வு கொள்ள முடியாது. அந்த இரத்தம் இங்கே துடிக்கும். அங்கே தசை விழுந்தால் இங்கே இருதயம் துடிக்கும் என்ற உணர்ச்சியை வெளிப்படுத்த இந்த உண்ணாநிலை என்றார் வைரமுத்து. நன்றி>புதினம்.

தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சாடல்.

யுத்தம் தீர்வாகாது: இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று தமிழக அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளருமான ஆற்காடு நா.வீராசாமி சாடியுள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 23 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் அகதிகளாக இங்கு வருகிறார்கள். சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வேதனை என்னவென்றால் செஞ்சோலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இலங்கை அதிகாரி கூறியுள்ளார். அங்கு போராளிகளின் பயிற்சித் தளம்தான் இருந்தது என்று உண்மைக்குப் புறம்பாக கூறிய செய்தியும் இங்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. செஞ்சோலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடன் கலைஞர் மிகவும் வேதனையடைந்தார். உடனே இந்திய அரசைத் தொடர்பு கொண்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கும்படியும் தமிழர்களை அழிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்து அதன் பிரதிநிதியை அனுப்பி அறிக்கை தருமாறும் கேட்டது. அமெரிக்காவும் தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளது. ஆனால் இன்னும் குண்டுகளை வீசி குழந்தைகளை அழித்து வருகிறார்கள். அதனால் அங்கிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை நன்றாகப் பராமரித்து வருகிறது. அவர்களின் வேதனைக் கண்டு நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அங்கிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு வேண்டும். சண்டை தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து. தற்போது இலங்கையில் தமிழ் மக்கள்- பசியால் பட்டினியால் மருந்தில்லாமல் மிகவும் துன்பப்படுகிறார்கள். அங்கு தமிழினமே அழியும் நிலையில் உள்ளது என்று கலைஞரிடத்தில் அங்கிருந்து வந்த சகோதரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஒருமுறை தி.மு.க.சார்பில் உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிய போது அந்நாட்டரசு மறுத்துவிட்டது. இந்திய அரசின் நடவடிக்கைகள் ஆறுதல் தருவதாக இல்லை. இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்தி போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும். தனி ஈழம் கிடைப்பதற்குள் அங்குள்ள தமிழர்களே இருக்கமாட்டார்களோ- தமிழினமே அழிந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. எனவே இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆற்க்காடு வீராசாமி. நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் கொன்றுவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் கோழைத்தனமானது. ஈழத் தமிழர்கள் விடியலையும் சுதந்திரக் காற்றையும் விரைவில் சுவாசிப்பார்கள் என்றார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது: கும்பகோணம் தீ விபத்தில் மாணவிகள் எரிந்தபோது தமிழ்நாடே எழுந்து அழுதது. செஞ்சோலையில் மாணவிகள் கொல்லப்பட்டபோது அப்படி நிகழ்ந்ததா என்பதை நம் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும். விபத்துக்கு அழுகின்ற தமிழன் கொலைக்கு அழமாட்டானா? விடுதலைப் புலிகளை வெல்லவே முடியாது என்று சிங்கள இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்தியாவின் இறைமைக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திலே இறைமைக்கு உட்பட்டு கண்டனத் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றியுள்ளார் என்பது அவரது வலியை வெளிப்படுத்துகிறது. இந்திய அரசே! சிங்களவருக்கு ஆயுதம் கொடுப்பது தமிழருக்கு விரோதம். இந்தியா ஆயுதம் கொடுக்காதபோது பாகிஸ்தானிடம் சிங்களவர் ஆயுதம் வாங்குவது இந்திய இறைமைக்கு விரோதம். சிங்களவன் சூழ்ச்சிக்காரன். வங்களா விரிகுடாவிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். அரபிக் கடலிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். சிங்கள இராணுவத்தால் பிரபாகரனின் நிழலைக் கூட தொட முடியாது. அன்னை சோனியா காந்தி அவர்களே! நீங்கள் தியாகத்தின் உருவம். எங்கள் தமிழ் மண்ணில் உங்கள் கணவரை இழந்தீர்கள். நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள், மானம் எல்லாம் எரிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் கணவரை இழந்தீர்கள். ஆனால் நீங்கள் தியாகத்தின் உருவம். ஏன் தெரியுமா? உங்கள் மாமியாரை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை மன்னித்து அந்த சீக்கிய இனப் பிரமுகரையே இந்திய பிரதமராக்கினீர்களே அதற்குத்தான் நீங்கள் தியாகத்தின் உருவம். பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்ததற்காக அல்ல. அந்த சீக்கிய இனத்தின் மீது காட்டிய கருணையை எங்கள் தமிழினத்தின் மீது காட்டக் கூடாதா? என்றார் வைரமுத்து. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கவிஞர்கள் அறிவுமதி, பொன்.செல்வகணபதி, மு.மேத்தா, இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, குகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி பொருளாளர் கயல் தினகரன், மாநில தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், தி.மு.கவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உசேன், ஜெ.அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருந்தொகையான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைக்கிறார். இதனிடையே அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க 8 ஆவது மாநில மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு செஞ்சோலைப் பகுதியில் ஆதரவற்ற சிறுமிகள் மீது குண்டுகளை வீசி 55 மாணவிகளைக் கொன்றும் மேலும் 195 மாணவிகளைப் படுகாயத்திற்குள்ளாக்கிய இலங்கை இராணுவத்தினரைக் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்னார்ட் பாத்திமா, தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவர் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காந்தி நகரில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதி பொதுமக்களால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரியூட்டி அழிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு அக்கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். நன்றி>புதினம்.

எம்.ஜி.ஆர். சிலைகளை சிதைத்த சிங்கள இராணுவமே!

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு அடித்தளமாகவும் அரணுமாக இருந்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைகளை சேதப்படுத்திய சிங்கள இராணுவம், தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: யாழ். குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையிலும் ஈழத்தமிழர்கள் நிறுவியிருந்த எம்.ஜி.ஆர். சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் சிலைகளுக்கு தார் பூசியும் சிங்கள இராணுவத்தினர் வெறியாட்டம் போட்டுள்ளனர். சிங்கள இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை போட்டு பொது மக்களின் நடமாட்டத்தை முடக்கிவிட்டு எம்.ஜி.ஆர். சிலையில் தாரைக்கொட்டி தேசப்படுத்தியுள்ளார்கள். தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு அடிப்படையும் அரணும் அமைத்துக்கொடுத்ததில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. எனவே தமிழீழ மக்கள் எம்.ஜி.ஆர். அவர்களை நெஞ்சில் வைத்து போற்றுகின்றனர். இந்தச்செயல் ஈழத் தமிழர்கள் மனதையும் தாய்த்தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தையும் காயப்படுத்தி கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்துக்கும், இராணுவத்தை ஏவி இயக்கி வரும் சிங்கள அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறுவதே பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார். நன்றி>புதினம்.

28 August, 2006

எம்.ஜி.ஆர். சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் வீதி திருத்தத்துக்கு வைக்கப்பட்டிருந்த தாரை எம்.ஜி.ஆர். உருவச்சிலையின் மீது பூசி சேதப்படுத்தியுள்ளனர். சிங்கள இராணுவத்தினர் இந்நடவடிக்கையினை போது அவர்களுக்கு உதவியாக துணை இராணுவக் குழுவினரும் உடனிருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் குருநகரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இராணுவத்தினரால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். நெல்லியடியில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் கரும்புலியாக தன் இன்னுயிரை அர்ப்பணித்த கப்டன் மில்லரின் திருவுருவச் சிலையையும் அண்மையில் சிங்கள இராணுவத்தினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களும் சிங்கள இராணுவத்தினால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. நன்றி>புதினம்.

ஏழைமக்களின் யுத்தம் பயங்கரவாதமா?- "ரொறன்ரோ சண்":

கனேடிய இஸ்ரேலியர்கள்- சீக்கியர்கள்- ஐரிஸ் நாட்டவர் செய்ததையேதான் தமிழர்களும் செய்கிறார்கள்: "ரொறன்ரோ சண்": கனடாவில் உள்ள இஸ்ரேலியர்கள்-சீக்கியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டவர்கள் தங்களது நாடுகளின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பைத்தான் கனேடியத் தமிழர்களும் செய்கிறார்கள் என்று கனடாவிலிருந்து வெளியாகும் "ரொறன்ரோ சண்" என்ற ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஏட்டில் எறிக் மார்க்கோலிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஆறு கனேடியத் தமிழர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது எனக்கு சேர் பீற்றர் உஸ்டினோவின் அறிவார்ந்த் வரிகளை நினைவூட்டியது. அந்த வரிகள்: "ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்" அமெரிக்க அரச தலைவர் புஸ்சின் தத்துவம் மற்றும் கொள்கைகளை பின்பற்றி கனடாவின் ஹார்ப்பர் அரசாங்கமும் அண்மையில் இலங்கை தமிழ்ப் புலிகள் கெரில்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. 1997 ஆம் ஆண்டு அமெரிக்கா பட்டியலில் இணைத்தது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. பல தசாப்தங்களாக பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களும் சிறுபான்மை இந்து தமிழர்களுக்கும் இடையேயான முறுகல் வளர்ந்து வந்தது. சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக தனித் தனிழ்நாடு கோரி தமிழ்ப் புலிகள் கெரில்லாக்கள் கொடுமையான இரத்தம் தோய்ந்த போரில் ஈடுபட்டனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் உயிரிழந்தனர். வெளிநாட்டு அனுசரணை இருந்தபோதும் யுத்தம் தொடர்கிறது. இலங்கையின் சிங்களவர் கட்டுப்பாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உள்ளது. விடுதலைப் புலிகளிடம் குறைந்தபட்ச ஆயுதங்களே உள்ளன. கனடாவில் உள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் பணத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் வாங்கப்பட்டன. - கனடாவில் உள்ள ஐரிஸ் இன மக்கள் இதனைத்தான் அயர்ந்தால்ந்து விடுதலை இராணுவத்துக்குச் செய்தனர - கனடாவில் உள்ள யூத இன மக்கள், இங்கிலாந்திடமிருந்து இஸ்ரேலிய விடுதலைக்கான போருக்காக ஆயுதங்களை வாங்க நிதி சேகரித்தனர். - பஞ்சாபில் சீக்கிய தனிநாடு கோரியவர்களுக்கு கனேடிய சீக்கியர்கள் நிதி உதவி அளித்தனர். புலிகள் துணிச்சல் மிக்கவர்கள்-உயர்வானவர்கள்- அவர்கள் தெற்காசியாவின் ஹிஸ்புல்லாக்கள். அரசாங்கத்துக்கு எதிராக தங்களது உடல்களையே மனித வெடிகுண்டுகளாக்கியவர்கள். அதன் பின்னர் 1980-களில் இந்தியா உள்நுழைந்து தன்னோடு இணைக்க முயற்சித்தது. 1991 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவை ஒரு பெண் புலி தன்னை வெடிக்கச் செய்து அழித்தார். விடுதலைப் புலிகள் கொடூரமாக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் வெறிபிடித்த, மிகவும் ஆபத்தான ஒரு சர்வாதிகாரமான அமைப்பினர். ஆனால் அவர்கள் அமெரிக்காவும் தற்போது கனடாவும் கூறுவது போல் "பயங்கரவாதிகள்" அல்ல. "அரசியல் காரணங்களுக்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது" என்பதுதான் பயங்கரவாதமாக பொதுவில் வரையறுக்கப்பட்டுள்ளது. விமானங்கள், தொடரூந்துகள், பாடசாலைகளைத் தகர்க்கும் பைத்தியகார நாய்கள் பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வரையறையின் கீழ் டிரெஸ்டென், ஹம்பர்க், டோக்கியோ, ஒசாகா, நாகசாகி மற்றும் ஹிரோசிமாவில் பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை என்ன என்று அழைப்பது? அல்லத - ரஸ்யாவினால் செச்சினியாவில் ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக 1 இலட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். - 1982 ஆம் ஆண்டு பெய்ரூட் மீதான் இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 18 ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். - 1991 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தில் தொற்றுநோயை உருவாக்கி ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். இவற்றை அந்த வரையறையின் கீழ் என்னவென்று அழைப்பது? - அமெரிக்கா, கனேடிய மற்றும் நேட்டோ படைகளால் ஆப்கான் கிராமங்கள் மீது குண்டு வீசப்பட்டது அது பற்றி பாரபட்சமின்றி என்ன சொல்வது? அல்லது அண்மையில் ஒரு இலட்சம் இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்கள் கொல்லப்பட்டது சர்வதேச சமூகத்தால் போர்க் குற்றம் இல்லை என்று கூறப்பட்டதே அதை என்ன என்று சொல்வது? மற்றவர்களை பயங்கரவாதத்தின் கீழ் குற்றம் சொல்கிறவர்கள் அடிக்கடி தாங்களே அதை செய்கின்றனர். தமிழ்ப் புலிகள் இலங்கையின் மூன்றில் பகுதியை நிர்வகித்து வருகின்றனர். அவர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைப்பது அர்த்தமற்றது- தவறானது. லெபனானில் ஊழலற்ற நிர்வாகம் நடத்தும் ஹிஸ்புல்லாக்களை "பயங்கரவாத காடையர்கள்" என்று அழைப்பது போல் தவறானதாகிவிடும். "பயங்கரவாதம்" என்ற சொற்றொடரானது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க கையாளப்படும் ஒரு அரசியல் ஆயுதம். முஸ்லிம் உலகத்தை கனடா அண்மையில் எதிரியாக ஆக்கிக் கொண்டது. இப்போது அந்நாட்டின் சொந்த மக்கள் மீதும் வர்த்தக நிலைகள் மீதும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கிறது. தமிழ்ப் புலிகளை சிலந்தி வலைக்குள் தள்ளிவிடுவதற்கு இது நேரமல்ல. குறிப்பாக கனடாவுக்கோ அமெரிக்காவுக்கோ எதிராக புலிகள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கடந்த கால கனேடிய அரசுகள் செய்யவில்லை. பிரச்சனையும் எழவில்லை. பயங்கரவாதம் என்பது ஒரு உத்தி, அது ஒரு சிந்தனை அல்ல. பல தசாப்தகால ஒடுக்குமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப் புலிகள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அனைத்து மக்களும் ஒடுக்குமுறைகளை சகிக்காமல் ஆயுதப் போராட்டம் நடத்தியதை நாம் மேற்கத்தியர்கள் மறந்துவிட்டோம். தனது சொந்த மக்களுக்கு உலகின் இரண்டாம் நிலையிலான சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலையில் மற்றொரு அந்நிய நாட்டு யுத்தத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டு புதிய பாதுகாப்பு பிரச்சனைகளை கனேடியர்களுக்கு உருவாக்க வேண்டும்? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

27 August, 2006

ஈழத்தமிழருக்கு என ஒரு குழுமம்.

வாருங்கள் நண்பர்களே, இது ஈழத்தமிழருக்கான ஒரு குழுமம். எமது எண்ணங்களை, எமது தேவைகளை, எமது விருப்புகளை பற்றி பேசுவோம். எமது தேசத்தின் விடியலுக்காக எம்மாலான அனைத்து முயற்சிகள் பற்றி பேசுவோம். வலைப்பதிவுகளின் பாதை, அதன் போக்கு, அதன் குறிக்கோள் பற்றி பேசுவோம். இணையத்தின்மூலம் இயன்றவரை செயற்படுவோம். சிறுதுருப்பையும் பெருஇருப்பாக்கி காட்டுவோம். தனித்தனியாக வலைபதித்த நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். தெரிந்ததை தெரிவிப்போம் தெரியாததை தெரிந்து கொள்வோம். அனைத்து வழிகளிலும் ஒன்றினைந்து எமது தேசத்தின் விடியலுக்கு வலுச்சேர்ப்போம். உணர்வாளர்கள், விருப்புடையோர்,எம்மீது நேசம்கொண்டோர் உங்கள் கருத்துக்களை கூற இங்கே சுட்டவும்.>http://groups.google.com/group/eelam1 நேசத்துடன் இவன் ஈழபாரதி.

இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின. முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர். அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று இந்திய தேசிய விளையாட்டுக் குழுச் செயலர் ஜீவன்ராம் சிரஸ்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடு இப்படியாக கவனக்குறைவுடன் இருப்பது வேதனைக்குரியது என்றும் இது பற்றி தெற்காசிய சம்மேளனத்தில் தாங்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போட்டியில் இந்திய தேசிய கீதத்தை திட்டமிட்ட முறையில் குழப்பமான வகையில் ஒலிபரப்பியமையானது இந்திய வீரர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்து சிறிலங்கா அணி வெற்றி பெறுவதற்காக திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம் என்றும் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சனிக்கிழமையான வரையான போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களில் சதத்தை எட்டி தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது நன்றி>புதினம்.

விடுதலைப் புலிகளின் உத்திகள்: இக்பால் அத்தாஸ்

யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். "சண்டே ரைம்ஸ்" வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான இக்பால் அத்தாசின் கட்டுரையில் இது குறித்து இடம்பெற்றுள்ளவை: கொழும்பில் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் மட்டுமின்றி சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் மத்தியிலும் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சில வளங்களை இந்த சமரில் பயன்படுத்தவில்லை? என்பதுதான் அந்த கேள்வி. அது தொடர்பிலான சில விடயங்கள் இன்னமும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன. - இரணைமடு நீர்த்தேக்கம் அருகே 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 5 இலகு ரக விமானங்கள் இருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு அமைப்பு ஒன்று உறுதி செய்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. வான்வழி தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் அதனை பாவிக்கவில்லை. - தரையிலிருந்து வானில் சென்று தாக்குதல் நடத்தும் ரஸ்ய தயாரிப்பான எஸ்.ஏ.7 என்ற ஏவுகணை விடுதலைப் புலிகளிடம் உள்ளது. மூன்றாம் ஈழப் போரில் சிறிலங்கா விமானப் படையின் பயணிகள் விமானத்தை 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கியபோது இது பயன்படுத்தப்பட்டது. இந்த ரக ஏவுகணைளின் பயன்பாட்டுக்காலம் குறைவானதுதன். அப்படியான நிலையில் அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தனி என்பவர் விடுதலைப் புலிகளிடம் இத்தகைய ஏவுகணைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். - தங்களது விமானத் தளத்தைப் பாதுகாப்பதற்கான விமானப் படை பாதுகாப்பு சாதனங்களை விடுதலைப் புலிகள் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு எழுதியிருந்தோம். இரணைமடு விமானத் தளத்துக்கு மேலாக 3 விதமான உலங்குவானூர்திகள் ஏவுகணைகளுடன் பறந்த நிலையில் இது தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஏ.7 தரையிலிருந்து வானை நோக்கித் தாக்குதல் ஏவுகணையானது விரைந்து சென்று தாக்காது என்பதால் அமெரிக்காவில் எஸ்.ஏ.18 ரக ஏவுகணைகளை வாங்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் விமானத் தளத்தில் பயன்படுத்தப்படும் பல தளபாடங்கள் குறித்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் விமான தளத்தை பயன்படுத்தவில்லை? - விடுதலைப் புலிகளின் பலமாக உள்ள கடற்புலிகள் தற்போதைய சமரில் பெருந்தொகையில் பயன்படுத்தப்படவில்லை. சிறிலங்கா விமானப் படையின் தாக்குதல் காரணமாகவா? அல்லது திட்டமிட்ட வகையில் நகர்த்தப்பட்டுள்ளனரா? - ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 18 ஆம் நாள் வரை 14 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் 141 சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அதிகாரிகள் மற்றும் 21 இராணுவத்தினர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 43 அதிகாரிகள் மற்றும் 685 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டு சமரில் 12 அதிகாரிகளும் 28 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. யூலை 26 ஆம் நாள் முதல் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 278 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 246 பேர்- கடற்படையில் 9- விமானப் படையில் 2- காவல்துறையில் 14- ஊர்காவல் படையில் 7. யாழ். சமரில் 800 போராளிகள் இறந்தனர் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுயாதீனமாக விசாரித்தமையில் இந்த எண்ணிக்கை சாத்தியமற்றது என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

இந்தியாவின் கவலை.

சிறிலங்காவில் பாகிஸ்தனிய ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறித்து நோர்வேயிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கார் ஸ்டொரை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சியாம் சரண் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இலங்கை நிலைமைகள் குறித்தும் சிறிலங்காவில் பாகிஸ்தானிய ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பான இந்திய புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதுவராக விமானப் படையின் பிரதி தளபதி நியமிக்கப்படுவது குறித்த தனது அதிருப்தியையும் நோர்வேயிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை போர் நிலைமைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடன் சியாம் சரண் ஆலோசனை நடத்தினார். மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூன்று நாள் போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான அகதிகளின் வருகையானது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே ஒரு அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் நோர்வேத் தரப்பினரிடம் சியாம் சரண் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அமைதி முயற்சிகளில் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து உருவாவதற்காக ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியையும் மகிந்தவின் சுதந்திரக் கட்சியையும் இணைந்து செயற்பட வைக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வழமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள "சம்பூர்" குறித்த சிறிலங்காவின் அச்சத்தை நோர்வேத் தரப்பினர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலைமையில் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 3 நாள் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நோர்வேத் தரப்பினர் தெரிவித்தனர். சியாம் சரணின் நோர்வே பயணத்தின் போது ஓஸ்லோவில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு நடைபெற்று வந்த நிலையில் புதுடில்லியில் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவையும் இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். நன்றி>புதினம்.

26 August, 2006

யாழிலிருந்து வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேறினர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று வெளியேறினர். நோர்வே அகதிகள் சபை, வேர்ல்ட் விசன், கரித்தாஸ், பார்க், டெனிஸ் மிதிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் சேவா லங்கா ஆகியவற்றின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று சனிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடிகள் தாங்கிய படகு மூலமாக வெளியேறியுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர். மேலும் அவசர மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகோரும் நிலையில் உள்ள 150 பொதுமக்களையும் யாழிலிருந்து படகுகள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வெளியேற்றியுள்ளனர். நன்ரி>புதினம்.

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் துரோகங்கள்.

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர். 1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார். மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன. மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர். மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர். 1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு. நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா? மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர். கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது. 1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது. 1983- முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா. கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை... கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது. 1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும். ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு. விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர். இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

25 August, 2006

இந்திய புலனாய்வுத் துறையின் தகவல்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் வான்வெளித் தாக்குதலை சிறீலங்கா வான்படையினர் மேற்கொள்ளுவதாக ராமன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் தமிழீழ தேசியத் தலைவரை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல்களை நடத்துவற்கும் சிறீலங்காப் படை அதிகாரிகளும் இணைந்து பாகிஸ்தான் அதிகாரிகள் திட்டம் ஒன்றை வகுத்து வருவதாகவும் ராமன் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மலைச் சாரல்களில் அமெரிக்க வான்படையினர் பயன்படுத்திய ''பக்கர் பஸ்ச'' எனப்படும் பதுங்கு குழிகளைத் தகர்க்கும் குண்டுகளை சிறீலங்கா வான்படையினர் பயன்படுத்துவற்கு பாகிஸ்தான் படையதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் ராமன் தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு. இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான். இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பான "ஐ.எஸ்.ஐ."யின் முன்னாள் அதிகாரி அவர் என்பதுதான். இப்போது சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நபரும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கக் கூடும். பாகிஸ்தானிய விமானப் படை பிரதித் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஏயர் வைஸ் மார்சல் சேக்சட் அஸ்லம் சௌத்ரிதான் இப்போதை புதிய தூதுவர். - மலைப்பிரதேசங்கள் அடங்கிய பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிரதேசத்தில் நடைபெற்று வரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப் படையை தீவிரமாக பயன்படுத்தியவர். - அமெரிக்காவிடமிருந்து எஃப் - 16 ரக விமானக் கொள்வனவில் தீவிரம் காட்டியவர - சீனாவுடன் இணைந்து ஜே.எஃப் - 17 அதிரடித் தாக்குதல் விமான உற்பத்திக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர். இந்த விமானம் எதிர்வரும் ஆண்டு பாகிஸ்தான் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. - சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்-9 மற்றும் எம்-11 ஏவுகணைகளை இரகசியமாக கொள்வனதில் தொடர்புடையவர். இத்தனை சக்திவாய்ந்த நபரைத்தான் "இராஜதந்திர" விடயங்களுக்கான தூதுவராக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான சக்திகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மிக நெருக்கமும் ஆயுதக் கொள்வனவும் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதற்கு கைமாறாக செய்திருக்கும் விடயமானது தென்னிந்தியாவை என்ன செய்யுமோ என்ற அச்சத்தை இந்திய .ராஜதந்திரிகள் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது. - பாகிஸ்தான் தூதுவராக இருந்து ஓய்வு பெற்ற பசீட் வாலி மொகமட், கொழும்பு தூதரகத்தில் 1990-களில் மற்றொரு பொறுப்பில் பணிபுரிந்த போது தமிழகத்தில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்ட்ப்பவர - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானின் மதராசாக்களில் பயிற்சி அளிக்க உதவியவர - ஜிகாத் குழு குறித்த உண்மைகளை விடுதலைப் புலிகள் அம்பலப்படுத்திய நிலையில் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பின் ஆலோசனையின் பெயரில் கிழக்கு மாகாண முஸ்லிம் ரெஜிமெண்ட் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கு எதிராக இயங்குவதில் இவருக்கு அவர் சளைத்தவர் அல்ல- அவருக்கு இவர் சளைத்தவர் என்ற வகையில் பாகிஸ்தான் தனது தூதுவர்களை நியமித்து வருகிறது. இந்தியாவின் பிரதான தொழில் மையங்களும் பாதுகாப்புத் தளபாட நிறுவனங்களும் அமைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே சிறிலங்காவில் தனது தளத்தை- களமுனையை பாகிஸ்தான் திறந்திருக்கிறது என்று இந்திய இராஜதந்திரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். மும்பாய், பெங்களுர், சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பிரதான தென்னிந்திய நகரங்களில் மும்பையைத் தவிர மற்றவைகளில் மத மோதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்திருக்கின்றன. ஆகையால் இந்திய அரசியலின் நிலைமைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த நகரங்களில் பாகிஸ்தான் புலனாய்வுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எளிதில் ஊடுருவும் சாத்தியமிருப்பதாகவும் அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர். ஜம்மு-காஸ்மீர் மற்றும் குஜராத் ஊடுருவல்களை விட தென்னிந்திய ஊடுருவல்களால் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கு எதிர்வினையாக "லாகூர்" பாணி நடவடிக்கைகளை கொழும்பில் "இந்தியா முடுக்கி விடலாம்". ஆனால் அந்த நடவடிக்கைகளை இனி புலிகளின் தலையில் போட்டு சிறிலங்கா தப்பிக்க முடியாது. அண்மைய கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தெரிவித்தது போல் உடனே இந்தியாவின் றோவை பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம்சாட்டும். இனி வேறு வழியில்லை... இந்தியாவை சிறிலங்கா பகைத்துத்தான் ஆக வேண்டும். நன்றி>புதினம்.

அனுராதபுரத்தில் இரகசிமாக எரியும் சடலங்கள்.

யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரணமாக கொல்லப்பட்டோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் அரசாங்கம் ஒப்படைக்காமல் உள்ளது. இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது தெரியவில்லை. மூன்று மாதங்களுக்குள் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்குவேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அவர் இன்னமும் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்றார் அவர். நன்றி>புதினம்

24 August, 2006

சிங்களபெளத்த, தமிழ்இந்துமத மோதலாக பார்க்கவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் ஊர்வலம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்து மக்கள் கட்சி, பாரதீய பார்வார்ட் பிளாக் மற்றும் தனித்தமிழர்சேனை ஆகிய மூன்று இந்து இயக்கங்கள், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான மோதல், வெறும் இனப்பிரச்ச்சினை மட்டுமல்ல என்றும், சிங்கள பௌத்த மதத்திற்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மதமோதலாகவும் இதை அணுகவேண்டும் என்றும் கூறினார், தமிழ்நாட்டின் இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். சுமார் 80 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்தியா, தனது அண்டை நாடான இலங்கையில் இந்து தமிழர்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கூறும் அர்ஜூன் சம்பத், தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும், ராணுவரீதியாக இந்தியா இதில் தலையிடவேண்டும் என்று கோருவதற்காகவே இன்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் முதல் கட்டமாக, சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகம் மூடப்படவேண்டும் என்றும், இலங்கையுடனான தனது ராஜீய உறவுகளை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று தாங்கள் சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகத்தை நோக்கி ஊர்வலமாக செல்வதாகவும் அவர் கூறினார். சுமார் 50 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்ட ஊர்வலக்காரர்களை, இலங்கை துணைத்தூதரகத்திற்கு மிகத்தொலைவிலேயே இடைமறித்த காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் தங்கள் காவலில் எடுத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். நன்றி>பிபிசி.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை எவராலும் தடுக்கமுடியாது.

""விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியே தீருவார்கள். அதனை எவராலும் தடுக்க முடியாது ""என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தர்மபுரியில் இடம்பெற்ற மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு வைகோ மேலும் தெரிவிக்கையில்: கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள நிலவரங்களை கண்டறிய நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்றேன். அங்கே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் சிங்கள இராணுவம் பிடித்து விட்டதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை தெரிந்து கொண்ட கருணாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடைய சுப்பிரமணியம் என்பவரை தொடர்பு கொண்டு எங்கள் நிலை குறித்து கேட்டார். "எங்களை இராணுவம் சுற்றி வளைத்த செய்தியை தெரிந்துகொண்ட கருணாநிதி நான் உயிரோடு திரும்ப மாட்டேன் என முடிவு செய்து கொண்டார். அதன் பின்னர் தான் நான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அந்தக்கடிதத்தில் நான் சிங்கள, இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், கடுகளவும் தி.மு.க.,வுக்கு களங்கம் விளைவிக்காமல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என தெரிவித்து இருந்தேன். தற்போது 17 ஆண்டுக்கு பின் பொய்யான தகவல்களை கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த 1989ஆம் ஆண்டு இலங்கை பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண முடிவு செய்திருப்பதை நான் கெடுத்து விட்டதாக கருணாநிதி பொய் சொல்லி வருகிறார். இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை. எதிர்வரும் 30 ஆம் திகதி சென்னையில் இலங்கை துõதரகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்øகத்தமிழர்களுக்கு பாதுகாப்புக்கோரி சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். இவ்வளவும் ஈழத்தமிழர்களுக்காகத் தான். சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். நன்றி>நிதர்சனம்.

ஐரோப்பியத் தடையே தற்போதைய சூழ்நிலைக்கு காரணம்.

தற்போது நிலவும் மோசமான சூழ்நிலைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனம் செய்தமையே காரணம் என, கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இன்று AFP செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து, எழுத்து மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உரிய முறையில் கவனத்தில் கொள்ளாது, பெரும் தவறை ஐரோப்பிய ஒன்றியம் இழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கண்காணிப்புக் குழு தலைவர் கருத்துரைக்கையில்: தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதால் ஏற்படக் கூடிய ஏழு வகையான மோசமான விளைவுகளை எதிர்வுகூறி, தடை அமுலுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நாம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தோம். தற்போது நாம் எதிர்வுகூறிய சகல மோசமான விளைவுகளும் நிகழ்ந்தேறிவிட்டன. இவ்வாறான நிலையில் தடைக்குப் பின்னர் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருக்கவில்லை என்றோ அன்றி, அது குறித்த சமிக்ஞைகள் கிடைக்கவில்லை என்றோ ஐரோப்பிய ஒன்றியம் கூற முடியாது. நாம் அனுப்பிய சுற்றறிக்கை சரியான முறையில் கவனத்திற்கு கொள்ளப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன். இது (Brussels) பிறசல்ஸில் மிகவும் உயர்ந்த மட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவாகவே உணரப்படுகின்றது.என்னைப் பொறுத்த வரை, தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் சம தரப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் கைச்சாத்திட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஒரு தவறான முடிவாகும். ஒரு தரப்பினர் திடீரென பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்படும் போது, இலகுவான முறையில் நெருக்கடிகள் தோன்றிவிடும். அந்த நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைத்த மாத்திரத்தில் கையாள முடியும் என சிறீலங்கா அரசாங்கம் கருதியது. யுத்தத்திற்கு பதிலாக சமாதானத்தை முன்னெடுப்பதில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக, சிறீலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தவறாக எடைபோட்டது.||இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் ஓய்வு பெறும் தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், யுத்தத்தின் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என்பதற்கு, அண்மையில் நிகழ்ந்த சமர்கள் சான்று பகர்வதாக சுட்டிக் காட்டியுள்ளார். நன்றி>புதினம்.

இலங்கைக்குள் சர்வதேசகுழு வடிவில் அமெரிக்கா புகுமா?

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும்,மோசமான மனித உரிமை மீறல்களும் காணப்படும் நாடாக இலங்கை உள்ளதாலும் மனித உயிர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத ஒரு நாடாக உள்ளதாலும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகளை கண்காணிக்கும் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதோடு இப்பிரச்சினையை தீர்க்கும் மார்க்கமொன்றை காண ஐ.நா விரைந்து செயற்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. ஆசிய மனித உரிமைகள் அமைப்பைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்பும் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள தமது அறிக்கையிலும் இதே கருத்தையே தெரிவித்துள்ளது . இலங்கையில் நிலவும் மோசமான சூழல் காரணமாக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் அனைத்து தரப்பினரையும் வெளிப்படையான அறிக்கையிடல் மூலம் இனங்காணலாம். அத்தோடு இந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் பிரசன்னம் மனித உரிமைகள் துஷ்பிரயோகப்படுத்துவதை நிறுத்த உதவும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது. மேலும் கடந்த 11ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் சுமார் 500,000 மக்கள் வெளித்தொடர்புகள் அற்று, உணவு,நீர் என்பனவற்றிற்கு கஷ்டப்படும் நிலைமையைக் கருத்திற்கொண்டு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உணவு,நீர் மற்றும் மருந்து வகைகள் உட்செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு; யாழ்குடாநாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது மக்கள் பாரதூரமாக பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படவில்லை. ஆயுதப்பிணக்குகளின்போது மக்களுக்கு முறையான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவதை பிணக்குகளில் சம்மந்தப்பட்ட தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்புக்களுக்கருகில் முகாமிட்டு இராணுவத்தினரை நிலைகொள்ள வைப்பது,இராணுவ தாக்குதல் உபகரணங்களை அமைப்பது,மற்றும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற விடாமல் தடுப்பது என்பன மனிதாபிமான சட்ட விதிகளுக்கு முரணானது. பிணக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும்.மனிதாபிமான தொண்டர் அமைப்புகளை உணவு,மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஆபத்துக்குட்பட்ட மக்களுக்கு வழங்க மோதல் பிரதேசங்களுக்கு அனுமதிக்க வேண்டும். ஆயினும் சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கும், தாக்குதல்களுக்கும்,வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் இவ்வமைப்புகள் நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. அண்மையில் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொடூரமாக கொல்லப்பட்டது, மற்றும் திருகோணமலையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை அப்பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்தமை, மூதூரில் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களின் மீதான கைக்குண்டு தாக்குதல்கள், மற்றும் கிழக்கில் சில நகரங்களில் தொண்டர் ஸ்தாபன அமைப்புகளில் வேலை செய்த பெண்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொண்டர் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. அரசாங்க அதிகாரிகள், மற்றும் பல அரசியல் கட்சிகள் என்பனவும் அரசசார்பற்ற அமைப்புகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தவன்னமுள்ளன. சுனாமி மீள்கட்டுமான திட்டங்கள் தாமதமாகியமைக்கும் இவ்வமைப்புக்களையே குறை கூறியுள்ளனர். எவ்வாறாயினும் பாதிக்கப்படும் மக்களுக்கு இவ்வமைப்புகள் உதவி புரிவதை தடுக்கலாகாது. இணைப்பு : newstamilnet.com Wednesday, 23 Aug 2006 USA

கண்காணிப்பு தலைவரின் கருத்துக்களால் அரசுகொதிப்பு.

சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தற்போதைய தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன், கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 17 அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்கா அரசு திட்டமிட்டே குழப்பி வருவதாக வெளியிட்ட கருத்தால், அரச உயர்மட்டம் கொதிப்படைந்துள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான உல்ப் ஹென்றிக்சன், கடந்த வார இறுதியில், ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில், மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சர்வதேச மனிதஉரிமை அமைப்பொன்றின் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், கண்காணிப்புக் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ள எத்தனித்தபோது, சிறிலங்கா அரச பக்கத்திலிருந்து திட்டமிட்டே தடைகள் போடப்பட்டதுடன், வேண்டும் என்றே பல்வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன என்று தெரிவித்திருந்தார். வேண்டுமென்றே தடைகளைப் போடுகிறார்கள் என்றால், எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்த ஹென்றிக்சன், விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம் சுமத்திய அரசு, ஏன் கண்காணிப்பாளர்களின் விசாரணைகளைத் திட்டமிட்டே தடுக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். உண்மைகள் வெளியே வந்துவிடும் என்று சிறிலங்கா அரசு பயப்படுவதாகவே தான் கருதுவதாகவும் மேலும் விளக்கியிருந்தார். இந்த கருத்துக்களால் கொதிப்படைந்த சிறிலங்கா அரசு, கண்காணிப்புக் குழுவையும், அதன் தலைவரையும் கண்டித்துள்ளது. கொழும்பு பத்திரிகையொன்றை அழைத்து, தான் விசேட பேட்டியொன்றைத் தரவிரும்புவதாகத் தெரிவித்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, கண்காணிப்புக் குழுவினரின் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு அடியோடு மறுப்பதாகத் தெரிவித்தார். அவர்களது விசாரணைகளைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரச தரப்பிலிருந்து தடைகள் போடப்பட்டு, உண்மைகளை மறைப்பதாக இருந்தால், நாம் சர்வதேச பிரதிநிதிகள் வந்து விசாரிக்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்க மாட்டோம் என்று தெரிவித்த ரம்புக்வெல, அவுஸ்திரேலிய விசேட பிரேத பரிசோதகர்களை, சிறிலங்காவுக்கு வந்து இது விடயமாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அழைத்திருக்காது என்றும் விளக்கினார். தருணத்திற்குத் தருணம், கண்காணிப்புக் குழுவினர், சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது தமக்கு ஆச்சரியம் தருகிறது என்றும் ரம்புக்வெல கூறினார். எனினும், அவுஸ்திரேலிய பிரேத பரிசோதகர்கள் வருவதற்கு அழைப்பு விடுத்த சிறிலங்கா அரசு, ஏற்கனவே இலங்கையிலுள்ள கண்காணிப்புக் குழுவினரை, விசாரணைகளை மேற்கொள்ள ஏன் அனுமதிக்கவில்லை என்பதற்கு, ரம்புக்வெல விளக்கமெதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

23 August, 2006

எம்மை சுதந்திரமாக செல்ல விடுங்கள்.

எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைச் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை துறைமுகத்திற்கு சம்பூரால் ஆபத்து என்ற சிறிலங்கா அரச தலைவரின் கூற்றை ஏற்கமுடியாது. திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதில் ஏனையவர்களை விட தமிழர்களுக்கே அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் கூறிவிடுங்கள். எங்களை தனியாக செல்ல இடமளியுங்கள். அதனைவிடுத்து தமிழ்மக்களைப் பற்றி அவமானமாக பேசுவதனை நிறுத்துங்கள். ஜே.வி.பியின் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் மிகவும் அவமானமாகப் பேசினர். தற்போது வடக்கு-கிழக்கில் பாரிய மனித நேயப் பிரச்சனை இருக்கின்றது. பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். விமானத்தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தனிநபர்களும் கொல்லப்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் ஆகியோரும் கொல்லப்படுகின்றனர். தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்றனர் என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. இது என்ன நியாயம்? முல்லைத்தீவில் மாணவிகள் கிபீh தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். இது என்ன நியாயம்? சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது. யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொலை செய்யப்படக்கூடாது. இவ்விடயம் தொடர்பாக ஐ.நா. இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா என்பன கரிசணையுடன் செயற்பட வேண்டும். அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகளை மீறி வருகின்றது. சர்வதேச சமூகம் புலிகளை மட்டுமே விமர்சிக்கின்றது. விமானக் குண்டுவீச்சுக்களை மேற்கொண்டவாறு அரச தரப்பும் யுத்தத்தில் ஈடுபடுவதனையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்க முடியாது. எதிர்த்தாக்குதல்களை மட்டுமே மேற்கொள்வதாக அரசாங்கம் கூறவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் அரசசார்பற்ற நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்திற்கு கண்காணிப்புக்குழுவினரும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். இது வெறும் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது. அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை விடுகின்றோம். அரசசார்பற்ற நிறுவன ஊழியர்களின் கொலை தொடர்பாக உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும். சம்பூர் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகும். சம்பூரில் புலிகள் இருக்கின்றனர் என்பதற்காக அங்கு விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடாது. ஜே.வி.பி.யினரே வழி நடத்துகின்றனர். ஜே.வி.பி. உறுப்பினர்களே இன்று அரசாங்கத்தை வழிநடத்துவதாகத் தெரிகின்றது. ஜே.வி.பி.யினருக்கு திருகோணமலையில் எந்தவிதமான மக்கள் செல்வாக்கும் இல்லை. எனவே ஜே.வி.பி.யினர் தமது நிலைப்பாட்டுக்கு மேல் அதிகாரம் செலுத்த முற்படக்கூடாது. ஆதாரம்: வீரகேசரி.

அருட்தந்தையை காணவில்லை.

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு ஜிம் பிறெளன் மற்றும் அவரது உதவியாளரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. அருட்திரு ஜிம் பிறெளன் அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக ஒருவாரத்துக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறெளன் தனது உதவியாளருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போய் உள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்காகன பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிரௌன். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாக சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார். நன்றி>புதினம்.

தேசியத் தலைவர் அறிவிப்பு.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழில் வெளிவரும் "நமது ஈழநாடு" நாளேட்டின் நிர்வாக இயக்குநருமான சின்னத்தம்பி சிவமகாராஜாவுக்கு தமிழீழத்தின் அதி உயர் தேசிய விருதான "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் சிறப்பித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சுயவாழ்வின் சுகபோகங்களைத் துறந்து, பொதுநல வாழ்வை இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். தமிழிழன விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து விட்டது. எதிரியின் கோரமான தாக்குதலுக்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார். இந்த இலட்சிய மனிதரை இழந்து எமது தேசம் இன்று ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கிறது. திரு.சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் அரசியற் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதர். அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். எளிமையும் இனிமையும் இணைந்த ஒரு இனிய மனிதர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வார். அனைவரையும் கவர்ந்துகொண்ட ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியும் சமூகசேவையானருமாவார். இவர் ஒரு சிறந்த தேசபக்தர். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர். தமிழரின் வாழ்வு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். இந்த இலட்சியப்பற்று அவரை எமது விடுதலை இயக்கத்தோடும் இறுகப்பிணைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் போராட்ட இலட்சியத்தையும் முழுமையாக நேசித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தார். அரசியல், ஆன்மீகம், கூட்டுறவு, ஊடகம் எனப் பல்வேறு பெரும் தளங்களில் இவர் செயற்பட்டார். இவரது செயற்றளம் அகன்று விரிந்திருந்தது. யாழ் மண்ணோடும் அந்த மண்ணில் மக்களோடும் ஒன்றியதாக அவரது வாழ்வு சுற்றித்திரிந்தது. எதிரியின் அகோர ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ள யாழ் மண்ணில் நின்றவாறு, எதிரியின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அசைந்துகொடுக்காமல் யாழ் மக்களுக்கு என்றுமே காப்பரணாக நின்றார். போர் நெருக்கடிமிக்க நாட்களில் அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்தார். ஆக்கிரமிப்புப் படைகளின் அழிவுகளையும் அட்டூழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். மக்களிடத்தில் விடுதலை உணர்வையும் தேசப்பற்றையும் தட்டியெழுப்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக யாழ் மண்ணில் நமது ஈழநாடு என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக இருந்து அந்தப் பத்திரிகையின் இன்றைய வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றிய மக்கள்பணி அளப்பரியது. திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமயடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. அவர்கள் எமது தேச ஆன்மாவில் என்றும் நீங்காத நினைவுகளாக காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள். "புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்" வே.பிரபாகரன். தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள நன்றி>புதினம்.

பயந்தது சிங்களம், யாழ்ராணுவத்தைமீட்க புதியதந்திரம்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறது. அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயார் என்ற தமது தரப்பின் நிலைப்பாட்டை அரசுத்தலைவர் என்ற ரீதியில் தான் வெளியிட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்தும் தமது தரப்பிற்கு சம அந்தஸ்துள்ள அதன் தலைவர் பிரபாகரனிடமிருந்து இதற்கு பதில் வரவேண்டுமே தவிர அந்த அமைப்பின் ஏனைய தலைவர்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கவில்லை என்றும் மகிந்த தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மகிந்தவின் இச்செய்தியை அமைச்சர் சொல்ஹெய்மிடம் தெரிவிப்பதற்காக திங்களன்றே தூதுவர் பிறட்ஸ்கர் நோர்வே விரைந்தார். நன்றி>புதினம்

22 August, 2006

மறைகழன்று புளுகுகிறான் சரத் பொன்சேகா.

தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான செயற்பாடாக உள்ளது. விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். அவர்களை முற்றாக அழிப்பதற்கு இன்னும் சொற்ப காலமே தேவை. மாவிலாறு தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்த நாளிலிருந்து இன்றுவரை, அவர்களது ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை நமது படைகள் அழித்துவிட்டன. இப்போது புலிகளின் படையில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள், சிறுவர்களே. புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் முகாம் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்த முகாமொன்றில், படையில் சேரும் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே நாம் தாக்குதல் நடத்தினோம். அதில் 300-க்கும் அதிகமான சிறு வயதுப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அங்கிருந்து ஏராளமான போராளிகளின் உடல்களை புலிகள் வேகமாக அகற்றிவிட்டனர். மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் பாடசாலை சிறுமிகள் ஏன் தங்கியிருக்க வேண்டும்? அவர்களிடம் துப்பாக்கி ஏன் இருக்க வேண்டும்? ஆயுதக்கிடங்கு அங்கே எப்படி வந்தது? அதனால், இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சியே இடம்பெற்றது. சிறிலங்காப் படைகளின் தாக்குதலை யாரும் குற்றம் சொல்ல முடியாது. தெல்லிப்பழையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா சுடப்பட்டார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில், அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே அவரைச் சுட்டார்கள். தற்போது இராணுவ தரப்பில் கிடைத்துள்ள உயர்மட்ட தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பல உறுப்பினர்கள் விலகி, இராணுவ முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் சரணடைகிறார்கள் என்றார் சரத் பொன்சேகா. ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, படைத்தரப்பில் 131 படையினர் கொல்லப்பட்டதுடன், 1,75 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தினார். இராணுவத்தினர், தங்களது நிலைகளை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வப்போது விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை, தள்ளாடியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை தங்களது விமானக் குண்டுவீச்சில் அழித்துள்ளதாக, விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார். எமது படைகள் வலிந்த தாக்குதலில் ஈடுபடவில்லை. தற்காப்பு நடவடிக்கைகளையும் பதில் தாக்குதல்களையுமே மேற்கொண்டு வருகிறோம் என்று மேலும் தெரிவித்தார். நன்றி>புதினம்.

புலிகளின் சர்வதேச தொடர்பாளராக நோர்வே செயற்படுகிறது:

சர்வதேச தொடர்பாளர்களாகவும், சர்வதேச தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாகவும், விடுதலைப் புலிகளின் நேரடி உதவியாளர்களாக நோர்வே நாட்டினர் செயற்படுகின்றனர் என்று ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது என்று ஹன்சன் பெளயர் கூறியிருப்பதன் மூலம், நோர்வேயின் இந்த இரகசிய புலிகள் ஆதரவு வெளிப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்தது. விடுதலைப் புலிகள் பலவீனப்படும் போது உடனடியாக அவர்களைக் காப்பாற்ற நோர்வே வந்து விடுவதைப் பார்க்க முடிகிறது என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்வதற்கு முயற்சிக்கும்போதே அதை நோர்வே எதிர்த்து வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் அபிலாசைகளுக்கு இணங்க நோர்வே செயற்படுகிறது என்பதை சிறிலங்கா அரசு புரிந்துகொண்டு, நோர்வேயின் அனுசரணைப் பணியை நிராகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நன்றி>புதினம்.

சிறிலங்காவுக்கு எதிராக தடை விதியுங்கள்.

சிறிலங்காவுக்கு எதிராக தடை விதிக்குமாறு சுவிஸ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை "தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுவிஸ் நாட்டுப் பிரஜைகள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுவிஸ் நாட்டின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எஸ்.கிருபாகரன் உட்பட மதத்தலைவர்கள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாவது: "எத்தனை நாடுகள் தடைகளை விதித்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு எமது விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்லும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ்தான் ஒன்று பட்டு இருக்கிறார்கள்" என்றார் அவர். "சில விசமிகள் செய்யும் பிரசாரங்களை கண்டு யாரும் அவநம்பிக்கை கொள்ளத்தேவையில்லை" என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இந்நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். நிகழ்வின் நிறைவில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சுவிஸ் அரசிடம் கையளிக்கப்பட்டது. அம் மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 1. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தாயகம் மற்றும் தேசியத்தை அங்கீகரியுங்கள் 2. தமிழீழ விடுதலைப் புலிகளை எங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரியுங்கள் 3. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை நிறுத்துங்கள் 4. தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளை கண்டியுங்கள் 5. சிறிலங்கா அரசுக்கு எதிராக தடைகளை விதியுங்கள் 6. இடப்பெயர்வுக்கும் அச்சம்கொண்ட வாழ்விற்கும் முற்றுப்புள்ளி வையுங்கள் 7. சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள் 8. எங்கள் தாகம் தமிழீழத் தாயகம் 9. சுவிசுக்கு ஈழத் தமிழர்களின் மனிதாபிமான அவல நிலையை போக்க காத்திரமான பாத்திரத்தை வகிக்க முன்வாருங்கள் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக சுவிஸ் கல்வி சார் சமூகத்தை அறிவூட்டும் செயற்திட்டமும், இளையோ அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. இணைப்பு : newstamilnet.com Tuesday, 22 Aug 2006 USA

21 August, 2006

செல்வம் அடைக்கலநாதன் சுவிசிலில் உரையாற்றிய சிறப்புரை.

சுவிசில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் உரையைக் பார்க இங்கே செல்லவும். http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1156209682&archive=&start_from=&ucat=1& நன்றி>பதிவு

பாக்கிஸ்தானின் புதியதூதுவர் ஷெசாட் அஸ்லாம்சவுத்திரி.

பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர் இந்தியாவக்கு எதிரான தமது புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய தூதுவர் பஷீர் வாலி மொகமட் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றை தெளிவாக தெரியப்படுத்துகின்றது. அதாவது, பஷீர் வாலி மொகமட்டினால் சீராக புடம்போட்டுள்ள புலனாய்வுக் களத்தினை வழிநடத்துவதற்கான முயற்சியின் ஒரு கட்டமே, இந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஷெசாட் அஸ்லாம் சவுத்திரியின் நியமனம் என்பது சர்வதேச இராஜதந்திர நகர்வுகளை உற்றுநோக்குபவர்களுக்கு தெளிவாகப் புரிந்துள்ளது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படைகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட 200 சிறப்புப் படையினர் தற்போது பாக்கிஸதானில், அமெரிக்க போர் வல்லுநர்களின் மேற்பார்வையில் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தேவையான பயிற்சிகளை பெறும் நோக்கிலும், ஸ்ரீலங்கா வான்படையினருக்கு உதவுவதாக கூறிக்கொண்டு பத்து முதல் பதினைந்து வரையிலான பாக்கிஸ்தானின் வான் படையினர் தற்போது கொழும்பில் தங்கியுள்ளனர். அண்மையில் தமிழர் தலைநகரை அண்மித்த பகுதிகளிலும் மற்றும் இதயபூமியிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்கள் இதற்கு சான்று பகிர்கின்றன. சிங்கள வான்படையின் விமான ஓட்டுநர்களால் மிகவும் துல்லியமாக இலய்குகளைத் தாக்கியழிக்கும் வல்லமை இல்லவே இல்லை என்பது கடந்த கால யுத்தங்களின் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த வகையில், புதிதாக பதவியேற்றிருக்கும் தூதுவர் பற்றி தமிழர்களாகிய நாம் அறிந்து வைத்திருத்ததல் மிகவும் நல்லது. ஏனெனில், எமது பெரும்பான்மையான தமிழ்ச் சமூகத்தில் தோன்றிவரும்; குறைபாடுகளில் ஒன்று, உலக நாடுகள் குறித்த ஆழமான அறிவின்மையாகும். எந்த நாடு எமது விடுதலை குறித்து கரிசனை காட்டுகின்றது அல்லது காட்டுவது மாதிரியான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை இனம்காணுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. மேலும், தமிழ் ஊடகத்துறையினரும் செய்திகளை தேடிச் சென்று, ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களை அலசுவது இன்றைய காலங்களில் குறைந்து செல்வது மிகவும் ஒரு ஆபத்தான நிலையினை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. புதிய தூதுவர், ஷெசாட் அஸ்லாம் சவுத்திரி பலோச்சிஸ்தானின் விடுதலை வீரர்களுக்கு எதிராக இடம்பெற்ற விமானத் தாக்குதல்களுக்கு பொறுப்பெடுத்தவர் என்பது இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறான ஒரு அதிகாரியை பாக்கிஸ்தான கொழும்புத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை வெளிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு பாக்கிஸ்தான் தனது படை வல்லுனர்களை கொடுத்து வருவதாக இந்தியா கருதி பாராமுகமகமாகச் செயல்படுமானால,; இது இந்தியாவின் அழிவிற்காக அமெரிக்க – பாக்கிஸ்தானிய புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சதி வலைப்பின்னல் என்பது எதிர்காலத்தில் தெரியவரும். எனினும், இந்தத் தூதுவரின் நியமனம் தமிழர்களின் போராட்டத்தின் திசையை எந்த வகையிலும் மாற்றம் செய்யமாட்டாது. மாறாக, தமிழர் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தப்போகின்றது. சர்வதேச போர் வல்லுநர்களின் புத்தகங்களில் புதிய போர்க்கலை அத்தியாயத்தையும் பதியப்போகின்றது என்பதே உண்மை. நன்றி>புதினம்.

20 August, 2006

பாகிஸ்தான்தூதுவரின் கொலைமுயற்சியின் பின்னனி?

இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் விடயத்தில் குறிப்பாக விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும், ஸ்ரீலங்காப்; பாதுகாப்புப் படைகளுத் தேவையான ஆயத உதவிகளை முழுமையாக வழங்குவதற்கு இந்தியா பின்னடித்ததைக் கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் ஸ்ரீலங்கா அரசு இந்தத் தூதுவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டது. பஷீர் வாலி மொகமட்டின் நியமனத்திற்கான இந்தியாவின் எதிர்ப்பு இவரது நியமனம் இந்தியாவின் இறைமை மற்றும் தேசியப் பாதுகாப்பு என்பவற்றிற்கு பாரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என இந்திய உளவு மற்றும் இராஜதந்திரிகள் இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தனர். மேலும், பஸீர் வாலி, கொழும்பைத் தளமாகக்கொண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் ஏவகணை செலுத்தும் தளங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ளும் முகமாகவே நியமிக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல், 1990 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானின் கொழும்புத் தூதுவராலத்தில் உருவாக்கப்பட்ட புலனாய்வு செயற்பாட்டின் முக்கிய பொறுப்பு அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காலப்பகுதியில், தமிழ்நாட்டைத் தளமாகக்கொண்ட அல் உம்மா என்ற பயங்கரவாத அமைப்பிற்கான சகல உதவிகளும் இவரால் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு மாகாணத்தின் தமிழ் முஸ்லீம்கள் சிலரினை தெரிவு செய்து, கராச்சியில் அமைந்திருக்கும் ஃபினோரி மதராஸ் என்ற தீவிரவாத சிந்தனைகளை கற்பிக்கும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பாடசாலைகளை நிர்வாகிப்பவரும் நிதியளிப்பவர் ரி.ஜே. முவ்ற்றி நிசாமுடின். இவர் வேறுயாருமல்ல பாக்கிஸ்தான ஜிகாத், தலிபன், அல்கையிடா அமைப்புக்களின் போஷகர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய உண்மை. இவர் 2004 ஆம் ஆண்டு மெ மாதம் 30 ஆம் திகதி இனம் தெரியாத குழவொன்றினால் கராச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பாக்கிஸ்தானின் தூதுவர் பஷீர் வாலி, இந்தியாவின் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு பெருமளவில் ஆயத மற்றும் பயிற்சி நெறிகளை பாக்கிஸ்தானிய காஷ்மீர் பகுதிகளில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடாத்தியும் வந்துள்ளார். இவ்வாறாக இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பக்கும் அச்சுறுத்தலாக விளங்கியவரும், இன்றும் விளங்கி வருபவருமான ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி கேர்ணல் ஃபஷீர் வாலி மீதான தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டிருக்கும் என்ற தீர்ப்பினை வாசகர்ளாகிய உங்களிடத்திலே விட்டுவிடுகிறேன். தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்துப் படுகொலைகளும் விடுதலைப் புலிகளினாலேயே நடாத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகின்றது. ஒவ்வொரு கொலைகளின் பின்னரும் விசாரணைக் குழக்களையும் அமைத்து வந்ததை நாம் எல்லோரும் அறிவோம். எனினும் எந்தவொரு விசாரணக்குழவின் அறிக்கையும் முற்றுமுழுதாக நிறைவு பெற்றதாக சரித்திரம் இல்லை! இனியும் நிறைவடையப்போவதில்லை என்பதே உண்மை! இறுதியாக, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு பாக்கிஸ்தான தற்போது தனது ஆளணி முதல் ஆயத தளபாடம் வரை சகல வளங்களையும் ஸ்ரீலங்கா அரசக்கு வழங்கிவருகின்றது உண்மை. இதற்கு ஆதாரம் அண்மையில் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்! இன்று ஸ்ரீலங்கா விமானப் படைகளின் யுத்த விமானங்களின் பிரதான ஓட்டியாகவிருப்பவர்கள் பாக்கிஸ்தானிய விமான ஓட்டிகள் என்பது இங்கு கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஓர் உண்மை நன்றி>நிதர்சனம். பாக். தூதரின் வாகன அணி தாக்குதல்: பின்னணியில் "றோ' என்று குற்றச்சாட்டு! கொழும்பில் பாகிஸ்தான் நாட்டின் தூதர் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியப் புலனாய்வுத் துறைக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரதினத்தன்று அந்நாட்டுத் தூதரும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கொழும்பில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்ததே. தூதரின் வாகனத் தொடரணியில் சென்ற கொமாண்டோ படையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் நான்கு கொமாண்டோ படையினர் உயிரிழந்தனர். தூதர் பஷீர் வலி முஹமட் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இந்தியப் புலனாய்வுத்துறையான "றோ' வின் வேலை என்று இஸ்லாமாபாத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்று பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்துவரும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக் கண்டு சீற்றமடைந்துள்ள இந்தியப் புலனாய்வுத்துறை இந்தத் தாக்குதலைத் திட்டமிட உதவியிருக்கின்றது. தூதர் வலி முஹமட் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர். பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ கேணல். இலங்கையில் தனது கடமைக் காலத்தைப் பூர்த்திசெய்யும் தருணத்தில் அவர் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் இலங்கைப் படைகளுக்கு இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் தரையிறக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்துவதில் தூதர் வலி முஹமட் முக்கிய குறிப்பிடக்கூடிய பங்கை வகித்தவர். "கொழும்பில் அவருடைய பணி இந்தியாவுக்கு உகந்ததாக இருக்கவில்லை' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தென்னாசியாவில் சுதந்திர வர்த்தக உடன் படிக்கையைக் கொண்டுள்ள இரண்டு நாடுகள் பாகிஸ்தானும் இலங்கையுமே ஆகும். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை இந்தியப் புலனாய்வு அமைப்பு இந்தத் தாக்குதல் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறது. இவ்வாறு பாகிஸ்தானின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி தெரிவிக்கிறது. நன்றி> உதயன் கொல்பிட்டியில் உள்ள கருணா குழுவின் அலுவலகம் இதுக்கு பாவிக்கப்பட்டதாக சிங்கள பத்திரிகை வேறு எழுதியது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான நிழல் யுத்தத்தின் களமாக தென்னிலங்கை மாறுகிறது போலுள்ளது. ஜிகாத் குழு கருணா குழு போன்றவர்களிற்கு முன்னிறுத்தி நிழல் யுத்தம்... ஒளிமயமான எதிர்காலம் கொழும்பில் தெரிகிறது.

பொங்கி எழும் தமிழகம்.

சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கறுப்புக் கொடி பேரணி: நாளையும் பொதுக்கூட்டங்கள்- ஆர்ப்பாட்டங்கள் சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இப்பேரணி நடத்தப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் வி.சி. குகநாதன், சீமான், புகழேந்தி உள்ளிட்டோர் கறுப்புக் கொடி, கறுப்பு உடை மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் முல்லைத்தீவு அவலத்தைச் சித்தரிக்கும் வகையிலான சவப்பெட்டி ஒன்றும் முல்லைக் கோரக் காட்சிகளை விளக்கும் பதாகைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. பேரணியின் நிறைவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக பழ. நெடுமாறன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர். இப்பேரணியில் பெண்கள் கைக்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இதர நிகழ்வுகள் சென்னையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய நீதிக் கட்சி சார்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். முல்லைப்படுகொலைச் சம்பவத்தை கண்டித்தும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பதாகைகள் ஏந்தியிருந்தனர். சேலம் அருகே நங்கவல்லி என்ற கிராமத்தில் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்த 45 பொதுமக்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் அருகே காளியப்ப கவுண்டன் புதூரில் இயங்கி வரும் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவிகள் 70 பேர் உட்பட 200 பொதுமக்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. உடுமலைப் பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றார். ஈரோடு கருங்கல்பாளையம் பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மதுரையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது. திருப்பூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டப் பேரணி நேற்று நடத்தப்பட்டுள்ளது. சேலம் மேட்டூரில் நேற்று சனிக்கிழமை அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதிப்பேரணியும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இப்பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். முல்லைத்தீவு படுகொலைக் காட்சிகளையும் ஈழத் தமிழர் படுகொலைக் காட்சிகளையும் விவரிக்கும் பதாகைகளையும் பேரணியில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர். நிகழ உள்ளவை சென்னையில் நாளை திங்கட்கிழமை "இலங்கை இனவெறி போரை எதிர்ப்போம்- தமிழின விடுதலையை ஆதரிப்போம்" என்ற முழக்கத்தை முன்வைத்து முகம், கவிதாசரன், கலை, யாதும் ஊரே, மெய்யறிவு, கல்வெட்டு பேசுகிறது ஆகிய சிற்றிதழ்கள் சார்பில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நாளை மாலை இந்நிகழ்வு நடைபெறுகிறது. முல்லைப் படுகொலையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நாளை மாலை தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாலர் தொல். திருமாவளவன் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சேலத்தில் நாளை அமைதிப் பேரணி, உண்ணாநிலைப் போராட்டம் ஆகியவை நடைபெற உள்ளது. சேலம் சாரதா கல்லூரி, சட்டக் கல்லூரி, சவுடேஸ்வரா கல்லூரிகளின் மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் தியாகு, கொளத்தூர் மணி, பேராசிரியர் சந்திரநாராயணன், தமிழ்த் தேசிய கட்சி இளமுருகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி பாவேந்தன் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை கண்டன மற்றும் வீரவணக்க உரை நிகழ்த்துகின்றனர். எதிர்வரும் 22 ஆம் நாள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆனூர் கோ.ஜெகதீசன், விடுதலை க.இராசேந்திரன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்துகின்றனர். பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் அகவணக்க இசைநிகழ்வு நடைபெற உள்ளது. எதிர்வரும் 23 ஆம் நாள் சென்னை தொலைக்காட்சி நிலையம் அருகே உள்ள சுவாமி சிவானந்தா சாலை அண்ணா அரங்கத்தில் முல்லைப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு பொடா சாகுல் அமீது தலைமை வகிக்கிறார். மக்கள் கவிஞர் இன்குலாப், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் இரங்கற்பா வாசிக்க பழ. நெடுமாறன், பேராசிரியர் அப்துல் காதர், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், மறுமலர்ச்சி திமுக நிர்வாகி மல்லை சத்யா, பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வழக்கறிஞர் அஜிதா, மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் கண்டன உரைகள் நிகழ்த்துகின்றனர். எதிர்வரும் 24 ஆம் நாள் சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் தமிழ் இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். நன்றி>புதினம்.

இலங்கைப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வு.

தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வசதியாகவும், நிர்வாக முறை தொடர்பாக வும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் நகலை இலங் கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் கடைபிடிக் கப்படும் நிர்வாக முறையை பின்பற்றலாம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. தேசிய அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க உதவி செய்ய அரசியல் சட்ட நிபுணர்களை அனுப்பி வைக்க தயாராக இருந்ததாகவும் இந்தியா தெரி வித்து உள்ளது. இணைப்பு : newstamilnet.com Sunday, 20 Aug 2006 USA

முல்லைத்தீவில் கொல்லப்பட்டவர்களின் புகைபடங்கள்.

முல்லைத்தீவு செஞ்சோலைமீது நாடாத்தப்பட்ட, அரசபயங்கரவாத விமானகுண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களதும்,ஊழியர்களதும் புகைப்படங்கள். School: Puthukkudiyiruppu Mahavidhyalayam Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT School: Visuvamadu Mahavidhyalayam Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar, Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu School: Udayarkaddu Mahavidhyalayam Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam Sivamayajeyam Kokila DOB: Kuravil Shanmugarasa Paventhini DOB: Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam School: Mullaitivu Mahavidhyalayam Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil, S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil School: Kumulamunai Mahavidhyalayam Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai School: Vidhyananda College, Mulliyavalai Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai School: Chemmalai Mahavidhyalayam Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai School: Oddusuddan Mahavidhyalayam Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi. School: Muruhananda Mahavidhyalayam Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai School: Tharmapuram Mahavidhyalayam Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram School: Piramanthanaru Mahavidhyalayam Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai Names of staff killed Chandrasekaran Vijayakumari (Age 27) Kandasamy Kumarasamy (Age 48) Solomon Singarasa (Age 65) S Jeyarubi (Age 20) நனறி>லங்கசிறி,தமிழ்நெற்.

டாக்டர் ராமதாஸின் வேண்டுகோள்.

பசி-பட்டினியால் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு விமானம் மூலம் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: "இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலினால் யாழ்ப்பாணத் தீபகற்பம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் பசி பட்டினியால் மடிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஓடோடி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் பணக்கார நாடுகளும் யாழ்பாணத் தமிழர்களை பட்டினி சாவில் இருந்து மீட்க முன் வர வேண்டும். "இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கொழும்பு நகரில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி இந்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. "இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியா அனுப்புகிற உதவி பொருட்களை உண்மையிலேயே பசி-பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு சென்றடையுமா? அல்லது அங்கே சிக்கித் தவித்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவத்துக்கு பயன்படுமா? என்பது தெரியவில்லை. எனவே இந்தியா அனுப்பும் உதவிப்பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். அல்லது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் விமானம் மூலம் உணவுப்பொருட்கள் யாழ்பாணத்தில் விநியோகிப்பட்டதை போல் இப்போதும் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மனிதாபிமான உதவி தமிழர்களை சென்றடையும்" என்றார் மருத்துவர் இராமதாஸ். நன்றி>புதினம்.