30 August, 2006

தமிழ்நாடுமாநிலம் எமக்கு எதிராக உள்ளது-மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவதாக நோர்வே வானொலியான (என்.ஆர்.கே.பி1) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை மேற்கோள்காட்டி நோர்வே வானொலி இச்செய்தியைத் தெரிவித்துள்ளது. ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி ஒலிபரப்பிய செய்தி விவரம்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருந்திருந்தால் சிறிலங்கா ஊடகங்களை நாளாந்த அடிப்படையில் அணுகிக் கொண்டிருப்போம். ஆனால் நாங்கள் இருதரப்பினரையும் சமதரப்பாக பாவிக்கிறோம். இருதரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தரப்பினர். இருவரையும் சமதரப்பாகத்தான் எங்களால் பாவிக்க முடியும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச அளவில் தனிமைப்படுத்தக் கோரும் கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது எமது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது என்று ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. மேலும், தனது அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் எதிராக உள்ள நிலையில் இனப்பிரச்சனையில் தனது அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதற்காக இங்கிலாந்தின் உதவியை மகிந்த ராஜபக்ச கோரியதாகவும் நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைக்கு எதிராக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்றும் நோர்வே வானொலியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

இப்போதுதான் உண்மையை சொன்னான் ராஜபக்சா.