18 July, 2006

கலைஞரின் அறிவுறுத்தலும், தொண்டமானின் திடீர் மறுப்பும்.

கலைஞரின் அறிவுறுத்தலால் அமைச்சரவையில் சேர தொண்டமான் திடீர் மறுப்பு? தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அறிவுறுத்தலால் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தீவிர நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அமைச்சரவையில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதிருக்கும் சிக்கலான நிலையில் நடுநிலையை பேணுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவுறுத்தியதாகவும் அதனால் அரசாங்கத்தில் இணைவதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகவில்லை என்றும் மகிந்தவிடம் தொண்டமான் கூறியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை. அதேபோல் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்று மகிந்தவிடம் ஜே.வி.பி.யினர் கடந்த யூலை 14 ஆம் நாள் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தில் இணைவதற்கான சூழ்நிலை என்று மறுத்துவிட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே அமைச்சரவை விரிவாக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனம் செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது குறித்து கூறுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நிலைமைகளோ மோசமடைந்து போரை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் அரசாங்கம் தன்னைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துகிறது. தற்போது சிறிலங்காவில் 100 அமைச்சர்கள் உள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றார். நன்றி>புதினம்.

0 comments: