12 March, 2006

தமிழீழ தலைநகரில் ஜிகாத்.

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது, ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில், பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள், பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர், ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி, அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில், இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது. லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி, சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. நன்றி>வீரகேசரி.

1 comments:

Anonymous said...

இதற்க்கு ஆதரவு கொடுக்கத்தான் பாகிஸ்தான் இப்போது இலங்கை வந்திருக்கிறதா?