02 September, 2006

வைகோ பேசியது சரியா தவறா?- க.சுப்பு

புலிகளை தீவிரவாதிகள் என்கிற காங்கிரஸ் கட்சி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா? தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க. சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் க. சுப்பு கூறியுள்ளதாவது: அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ வெளிப்படுத்திய உணர்வில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் கண்மூடித்தனமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தப் பொறுப்பான நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஆனால் அங்கு வாழ்கிற கடைசித்தமிழன் வரை கொன்று குவிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் தாண்டவமாடுகிறது. இந்தக் கொடுமைகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் வைகோ உள்பட எம் போன்றவர்களின் கருத்து. இதில் என்ன தவறு? இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரே ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள்தான் என்பது வைகோவின் கருத்து. எனவே அதற்கு தார்மீக ஆதரவு தருகிறார். விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பினர் என்கின்றனர் காங்கிரஸ்காரர்கள். ஆனால் அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா? இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினால், இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்கிறார்கள். கைது செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எதிரிகளைக் கொல்ல ஏ.கே. 47 துப்பாக்கியையும் ஏந்துவோம் என்று ஒருவர் பேசினால் உடனே ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு அவர் சுட்டுத் தள்ளப் போகிறார் என்பது அர்த்தம் அல்ல. நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வலிமை சேர்க்கும் வார்த்தைகளாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய தீவிரவாதத்தை தூக்கிப் பிடிப்பதாகக் கருதக் கூடாது. பகுத்தறிவுப் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது பாரதிதாசன் பாடினார், சீரங்க நாதரையும தில்லை நடராஜனையும பீரங்கி வைத்து பிளந்தெறிவது எந்தக் காலம்? இந்த வரிகளை கருணாநிதி உள்பட எல்லோரும் அன்று தெருத்தெருவாகச் சொல்லி அலைந்தார்கள், யாரும் பாரதிதாசனைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும் என்றார் க. சுப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட வெண்டும்- சிங்கள மக்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே ஒழிய யாரையும் மிரட்டுகிற பாணியிலோ, சவால் விடும் பாணியிலோ பேசுவது பிரச்சனையைத் திரிக்க உதவாது என்பதே மக்கள் கருத்து கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காங்கிரஸ் கட்சியின் விமர்சன நிலைப்பாட்டையும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

Mr.Subbu might have given a different view had Mr.Vaiko continued with the front led by DMK. So let us not give much weight to his views.

Anonymous said...

Mr.Subbu might have given a different view had Mr.Vaiko continued with the front led by DMK. Hence let us not give weightage to the his comments.